அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலின் போது குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது திட்டங்கள், கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த நேருக்கு நேர் விவாதம் நடத்துவர். அதன் படி அதிபர் வேட்பாளர்கள் மூன்று முறை நேருக்கு நேர் விவாதம் நடத்துவது வழக்கம்.
அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் முதல் விவாதம் நடைபெற்றது.
விவாதம் முடிந்த சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், இரண்டாவது விவாதத்தை காணொலி மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு ட்ரம்ப் ஒப்புக் கொள்ளவில்லை.
இதைத் தொடர்ந்து, மியாமியில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது. 22 ஆம் தேதி நடைபெறும் மூன்றாவது விவாதத்திற்கான ஏற்பாடுகள் மட்டும் தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜோ பிடனுக்கும் தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது. ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், வரும் 19 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரத்தில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோ பிடனுக்கு வாக்களிக்கக்கோரி அவர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ட்ர்மப், ஒபாமா ஒரு பிரயோஜனமற்ற பிரச்சாரகர். கடந்த முறைப் போலவே இம்முறையும் நான் தேர்தலில் வெற்றிப்பெறுவேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: 70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் பெண்ணுக்கு மரணதண்டனை!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…