அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் டாக்டர் அமி பெரா, ரோகண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோரும், மேல் சபையில் கமலாஹாரிஸூம் எம்பிக்களாக உள்ளனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் 3ஆம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் அவையில் உள்ள 435 தொகுதிகளுக்கும், மேலவையான செனட் அவையில் மொத்தமுள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும், 13 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள இந்திய வம்சாவளியினர் ஏராளமானோர் எம்பிக்களாக தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை வேட்பாளர்களை சமோசா காகஸ் என செல்லமாக அழைப்பர்.
பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் ஹிரால் திப்பிர்னேனி என்ற பெண் மருத்துவர், அரிசோனாவில் போட்டியிடுகிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரஸ்டன் குல்கர்னி, டெக்சாஸ் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் களம் காண்கிறார்.
மேல்சபையான செனட் சபைக்கு மைனே மாகாணத்தில் இருந்து இந்திய வம்சாவளி பெண் சாரா கிதியோன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இதேபோல் குடியரசு கட்சி சார்பில் நியு ஜெர்சி மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிக் மேத்தாவும், விர்ஜீனியா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு மங்கா அனந்தத் முலாவும் போட்டியிடுகின்றனர். தற்போதைய எம்.பி.க்களில் மருத்துவர் அமி பெரா மற்றும் ரோகன்னா ஆகிய இருவரும் ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னியா மாகாணத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர்.
இவர்களை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் மற்றொரு இந்திய வம்சாவளியான ரிதிஷ் தாண்டன் களம் காண்கிறார். ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பிலும் பிரமிளா ஜெயபால், வாஷிங்டன் மாகாணத்திலும் போட்டியிடுகிறார். இதனால் இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றத்தை இந்திய வம்சாவளியினர் அலங்கரிப்பர் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிக்கலாமே: அதிபர் தேர்தல்: 2.20 கோடி வாக்காளர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…