கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று அமெரிக்க நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.
இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற பைடன், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்ட நபர் உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்வுகளில் மாஸ்க் அணியாமல் பங்கேற்கலாம் என அமெரிக்காவின் நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும் அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர், கொரோனா பாதிப்பு உள்ளவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும் தனிமைப்படுத்திக்கொள்ளவோ, பரிசோதனை எடுக்கவோ தேவையில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.97 கோடியைக் கடந்துள்ளது.