கொடைக்கானல் அருகே மரம் முழுவதும் அந்துப்பூச்சி பிரம்மாண்டமாக கூடாரம் கட்டியுள்ளதால்,அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான குப்பம்மாள் பட்டி அருகே ஒட்டன்சத்திரம் செல்லும் முக்கிய சாலையின் ஓரத்தில் இருந்த சோலை மரங்களில் லட்சக்கணக்கான அந்துப்பூச்சிகள் பிரம்மாண்டமாக கூடாரம் கட்டி வருகின்றன. இதனை சாலையில் பயணிக்கும் பயணிகள்,வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் ஆர்வத்துடனும்,அதிசயத்துடனும் பார்த்து செல்கின்றனர்.அந்துப்பூச்சியின் பிரம்மாண்டமான கூடாரத்தை சாலையில் பயணிக்கும் பயணிகள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இந்த அந்துப்பூச்சி அமெரிக்காவை பூர்விகமாக கொண்டவை. தற்போது ஐரோப்பா ஆசிய கண்டங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொடைக்கானல் மலை பகுதிகளில் முதன்முறையாக தென்பட்டுள்ளது. இந்த பூச்சி மரத்தில் பரவினால் மரத்தில் இலைகளின் அடியில் முட்டைகளிட்டு இலைகளை அரித்து மரம் முழுவதும் சிலந்தி வலை போல் கூடாரம் அமைத்து விடும். பின்னர், இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு நாளடைவில் கூட்டு புழுவாக மாறி அந்துப்பூச்சியாக வெளிவருகின்றன.
இந்த பூச்சிகளின் கூடாரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே தென்படும் ஆனால் சாலையின் ஓரங்களில் அந்துப்பூச்சி கூடாரங்கள் தென்படுவதால் அருகிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள மரங்களில் பரவினால் மரம் முழுவதும் இலை இல்லாமல் பட்டுபோகும் அபாயம் காணப்படுகிறது.
இதனை தீ வைத்து அழிக்காமல் அந்துப்பூச்சி கூடாரங்களை பாதுகாப்பான அப்புறப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த பூச்சி மனிதர்கள் மீது பட்டால் அலர்ஜி ஏற்படும் எனவும் வேறு பெரும் ஆபத்துகள் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
இது குறித்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர் உஷா ராஜா நந்தினி , இந்த பூச்சிகள் வேகமாக மரங்களை அழிக்க கூடியது என்று எச்சரித்துள்ளார்.