செப்டம்பர் மாதம் இந்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.
இது தங்களின் விளைப்பொருட்களை விற்பனை செய்ய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 26 ஆம் தேதி முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆனால் இந்திய அரசு அவர்களின் போராட்டத்துக்கு செவி சாய்க்கவில்லை. பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசுடனான விவசாயிகளின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், ரயில் மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர்.
தற்போது விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
தொடர்ந்து அமைதியாக போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு கனடா மற்றும் பிரிட்டன் அரசுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்திய விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட ஏழு எம்பிக்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களால் இந்திய சந்தைகளின் செயல்திறன் மேம்படும் எனக் கூறி இச்சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.
மேலும் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் அதிகளவில் தனியார் துறை முதலீட்டை ஈர்க்க முடியும் என்றும் பைடன் அரசு கூறியுள்ளது.
விவசாயிகளின் அமைதிப் போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம் என்று கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், விவசாயிகள் மற்றும் இந்திய அரசும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.