ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டவர்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுவதற்காக அமெரிக்க அரசு ஹெச்1பி, ஹெச்2 பி, எல்1 உள்ளிட்ட விசாக்களை வழங்குகிறது. இவற்றில் ஹெச்1பி விசா இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலமானது.
குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது.
அதாவது ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த விசா வழங்கப்படுகிறது.
இதனை பயன்படுத்தி தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.
அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
ஹெச்1பி விசா பெற்று பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கு ஹெச் 4 விசாக்களுடன் வேலை வழங்கப்பட்டுவந்தது. அமெரிக்கர்களின் நலனை கருத்தில்கொண்டு ஹெச்1பி விசாக்களையும் ஹெச்4 விசாக்களையும் விநியோகிக்க தடை விதித்து கடந்த ஆண்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், ட்ரம்பின் அந்த உத்தரவை ரத்து செய்தார். இதனால் ஹெச் 1 பி விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி வழங்க நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்திற்கு கூகுள் தலைமையிலான அமேசான், ஆப்பிள், ட்விட்டர், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, “புலம்பெயர்ந்து வருவோருக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க அரசின் திட்டத்தால் கூகுள் பெருமை அடைகிறது. ஹெச் – 1 பி விசாவுடன் பணியாற்றுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி வழங்கும் இத்திட்டத்திற்கு கூகுள் நிறுவனத்துடன் 30 நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகி பல குடும்பங்கள் பலன் பெறும்” என தெரிவித்தார்.