உலகளவில் 770 மில்லியன் கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஆய்வின்படி, கம்பாரிடெக் என்ற நிறுவனமே கண்காணிப்பு கேமராக்களுக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
உலகளவில் பயன்பாட்டில் உள்ள முதல் 10 நகரங்களில் ஒன்பது மற்றும் பாதிக்கும் மேற்பட்ட (54%) கேமராக்கள் சீனாவில் உள்ளன.
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான தையுவானில் மட்டும் 4,65,255 கேமராக்கள் உள்ளன.
சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் மொத்தம் 1.15 மில்லியன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த சூழலில் அமெரிக்காவில் உள்ள வங்கிகள், சிறைகள், பள்ளிகள், மருத்துவமனை, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு, டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலைகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 1,50,000 கண்காணிப்பு கேமராக்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி ஊடுருவப்பட்ட சில காணொளிகளின் படங்கள் ட்விட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோக்கள் வெளியானதன் மூலம் பொதுமக்கள் எந்த அளவுக்கு கண்காணிக்கப்படுகின்றனர் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
கண்காணிப்பு அமைப்புகளை இணையத்தில் நிர்வகிக்கும் Verkada என்னும் நிறுவனத்தின் உயர் நிர்வாகி ஒருவரின் தகவல்களைக் கொண்டு காணொளிகளை ஊடுருவியது தெரியவந்தது. இதனை அறிந்த சட்ட அமலாக்க அமைப்புகள், விசாரணையை தொடங்கியுள்ளன. இது மிகப்பெறும் விதிமீறல் என்றும், இந்த குற்றத்திற்காக verkada நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறை மற்றும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளில், சிறையில் நடக்கும் காட்சிகள் மற்றும் ஒரு வங்கியின் செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன.