அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காந்தி சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
டேவிஸ் நகரிலுள்ள பூங்காவில் 6 அடி உயரத்திற்கு உள்ள காந்தியின் வெண்கல சிலையின் கால் பகுதியை சிலர் உடைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து சேதமடைந்த காந்தி சிலை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. காந்தியின் 74 ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில்
காந்தி சிலை மண்ணில்
வீழ்த்தப்பட்டது கண்டு
மனம் உடைகிறேன்.உலகமெல்லாம் காந்தியை
மாற்றி மாற்றிக் கொல்லலாம்.ஆனால், ஒருபோதும்
அகிம்சை சாவதில்லை.#Gandhi— வைரமுத்து (@Vairamuthu) January 30, 2021
சிலையை சேதப்படுத்தியது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். காந்தி சிலை சேதமடைந்தது குறித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, “அமெரிக்காவில் காந்தி சிலை மண்ணில் வீழ்த்தப்பட்டது கண்டு மனம் உடைகிறேன். உலகமெல்லாம் காந்தியை மாற்றி மாற்றிக் கொல்லலாம். ஆனால், ஒருபோதும் அகிம்சை சாவதில்லை. #Gandhi” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை உரிய தண்டனையை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
இச்செயலைச் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என இந்தியா அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே காந்தி சிலை சேதமடைந்ததை காலிஸ்தான் அமைப்பினர் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் இந்திய சிறுபான்மையினர் அமைப்பினர் மீதும் சந்தேகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்தாண்டு டிசம்பரில் வாசிங்டனில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த காந்தி சிலையைச் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர். இதன்மூலம் இந்தியாவில் மீண்டும் காலிஸ்தான் இயக்கம் தலையெடுத்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.