அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்று நோக்கும் நிலையில் இதில் இந்தியர்கள் பங்கும் கணிசமாக உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் குடியரசுக் கட்சியும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் 13 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவர தீவிர முயற்சி செய்து வருகின்றன. பிரதமர் மோடியை அழைத்து இந்தியர்களின் வாக்குகளுக்கு ட்ரம்ப் காய் நகர்த்திய நிலையில், ஜனநாயக கட்சி ஒரு படி மேலே போய் இந்தியாவை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக களமிறக்கி அதிரடி காட்டியுள்ளது.
துணை அதிபர் வேட்பாளர் ஆனதைத் தொடர்ந்து தனது ஊடக செயலாளராக சபரினா சிங் என்ற அமெரிக்க வாழ் இந்தியரை கமலா ஹாரிஸ் நியமித்துள்ளார். இப்பதவியை பெறும் முதல் அமெரிக்க இந்தியர் சபரினா சிங் ஆவார். ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனின் பரப்புரை குழுவில் அமெரிக்க வாழ் இந்தியரான அமித் ஜானி இடம் பெற்றுள்ளார். இவரது தந்தை சுரேஷ் ஜானி, அமெரிக்க பாஜக நண்பர்கள் குழுவை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். பைடன் தேசிய கவுன்சில் குழு ஆதரவு இந்தியர்கள் என்ற அமைப்பின் இயக்குநராக சஞ்சீவ் ஜோஷிபுரா என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியர்களை கவரும் பிடனின் யுக்தியாக இது பார்க்கப்படுகிறது. இந்தியர் உள்ளிட்ட தெற்காசியர்களை கவர பிடன் ஏற்படுத்தியுள்ள அமைப்பின் தேசிய இயக்குநராக நேஹா தவான் இடம் பெற்றுள்ளார். இவர் ஒபாமாவின்தேர்தல் பரப்புரை குழுவிலும் இடம் பெற்றிருந்தவர் ஆவார். மறுபுறம் குடியரசுக் கட்சியில் பரப்புரை குழுவில் சம்பத் ஷிவாங்கி என்பவர் இடம் பெற்றுள்ளார். அமெரிக்க எம்பி.க்களுடன் இவர் நெருங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல ஹர்மீத் கவுர் தில்லான் என்ற அமெரிக்க வாழ் இந்தியரும் ட்ரம்ப்புக்கு ஆதரவாக நாடெங்கும் வாக்கு வேட்டையாட உள்ளார்.