அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தினமான இன்று சாலையில் நின்று கொண்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் கொண்டாட்டங்கள் பாதுகாப்பான முறையில் நடைபெற்றன.
டென்னசி மாகாணம் நஷ்விலி நகரில் உள்ள சர்ஜ் தெரு அருகே ஏராளமான உணவகங்களும், கேளிக்கை விடுதிகளும் உள்ளன. ஆதலால் அங்கு மக்கள் கூட்டம் எந்நேரமும் அலைமோதும்.
இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் அருகே சந்தேகத்திற்கு இடமான ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் கார் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதால் அதில் ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர். உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர். ஆனால், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வருவதற்கு முன்பாகவே அந்த கார் வெடித்து சிதறியது. இதனால், உணவகங்கள், கேளிக்கை விடுதிகளின் கண்ணாடி ஜன்னல்கள் சிதறின. எதிர்பார்க்காத நேரத்தில் கார் வெடித்ததால் போலீசார் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில், கார் வெடித்து சிதறியது திட்டமிடப்பட்ட தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உலகமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மூழ்கி கிடந்த நிலையில் திடீரென நடந்த இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: “இந்திய விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும்”
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…