அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்ததில் அந்த வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
மிச்சிகன் மாகாணம் டெட்ராய்ட் நகரிலிருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரகவிமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஒரு விமானியும், இரண்டு பயணிகளும் இருந்ததாக தெரிகிறது.
புறப்பட்டு சென்ற சிறிது நேரத்துக்குப்பிறகு டெட்ராய்ட்டின் புறநகர் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த சிறிய ரக விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
உடனே செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்த விமானி, விமானத்தை அவசர அவரமாக தரையிறக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுப்பாட்டை மீறி, அங்குள்ள ஒரு வீட்டின் மீதுவிழுந்தது.
உடனே அந்த சிறிய விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தால் நிலைகுலைந்த வீடும், தீப்பிடித்து பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் மிகக்குறைவான நேரத்தில் தீ மளமளவென வீட்டிற்குள் பரவியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக விமானம் விழுந்த வீட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
விமானம் விபத்தில் சிக்கியதற்கு தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் உறவினர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்துவருகின்றனர். அமெரிக்காவில் இதுபோன்ற சிறிய ரக விமானங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகிவருகின்றன.
இதையும் படிக்கலாமே: இறந்தவர்களை புதைக்க இடமில்லாமல் தவிக்கும் அமெரிக்கா!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…