அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் முழுவதும் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ளா துல்சா நகரில் வாக்குக்கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்விளைவாக அந்நகரில் வழக்கமான கொரோனா பாதிப்பை விட இருமடங்கு அதிகரித்திருப்பதாக அந்நகர சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினசரி அங்கு பதிவாகும் பாதிப்புகளி எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளன. புதன்கிழமை மட்டும் துல்சா நகரில் சுமார் 266 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் ட்ரம்ப் நடத்திய பேரணிக்கு முன் துல்சா நகரில் தொற்று பாதிப்பு குறைவாகவே இருந்ததாகவும், ட்ரம்பின் நிகழ்ச்சிக்கும் கொரோனா பரவல் அதிகரித்ததற்கும் தொடர்பு இருப்பதாகவும் அந்நகர சுகாதாரத்துறை இயக்குநர் புரூஸ்டார்ட் தெரிவித்துள்ளார். அதற்கு முழு காரணம் ட்ரம்ப். ஏனெனில் அந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ட்ரம்போ அல்லது பார்வையாளர்களோ முகக்கவசம் அணியவில்லை. பேரணி நடைபெறும்போதே அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் பலர் இது நோய் பரவலுக்கு காரணமாகலாம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்திருந்தனர். நாட்டின் அதிபரே இப்படி நோய் பரவலுக்கு காரணமாக இருப்பது அந்நாட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.