அமெரிக்காவில் உள்ள தேவாலயம் ஒன்றில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர், கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் உள்ள கிரேஸ் பாப்டிஸ்ட் தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கினார். இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர், அங்கிருந்து தப்பியோடியதால் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேவாலாயம் உள்ள பகுதி அடைக்கப்பட்டு, அதனை சுற்றியுள்ள பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் அந்த தேவாலயத்தில் பிரார்த்தனை எதுவும் நடக்கவில்லை. கடுங்குளிரில் அவதிப்பட்ட வீடற்றவர்கள் சிலர் அந்த தேவாலயத்துக்குள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே சான் ஜோஸ் நகர மேயர் சாம் லிக்கார்டோ, கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டதாக ட்வீட் செய்தார், சிறிது நேரத்திலேயே ட்வீட்களை நீக்கியதால் குழப்பம் எழுந்தது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கையை எதிர்பார்க்கலாம் என்று சாம் லிக்கார்டோ தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் ஜோ பைடனிடம் ஒப்படைக்க ஏற்பாடு!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…