பைசர் நிறுவன தடுப்பூசியை தொடர்ந்து மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
”கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் ஒரு கோடியே 79 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்துக்கு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பைசர் மற்றும் ஜெர்மனி நிறுவனமான பயோ என்டெக் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
இதையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் பைசர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு நிபுணர் குழு மற்றும் உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையின்போது அமெரிக்காவிலுள்ள 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதில் 94% பலன் அளிப்பதாக அமெரிக்க மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.
இதையும் படிக்கலாமே: ஹெச் 1பி விசா பெறுவோரின் வாழ்க்கை துணைகளுக்கு பணி அங்கீகார காலத்தை நீட்டிக்க கோரிக்கை!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…