அமெரிக்காவில் உள்ள தபால் அலுவலகத்துக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த காவல் அதிகாரி பெயரை சூட்டுவதற்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சந்தீப் சிங் தலிவால். அமெரிக்காவில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் பணியில் இருந்தபோது பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து, சந்தீப் சிங்கை கவுரவிக்கும் வகையில் அவர் இறந்த இடத்திற்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்துக்கு அவரது பெயரை சூட்ட திட்டமிடப்பட்டது.
இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு அதிபர் ட்ரம்ப், ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெக்சஸ் மாகாணம் ஹூஸ்டனில் 315 அட்டிக்ஸ் ஹோவல் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகத்திற்கு சந்தீப் சிங் தலிவால் தபால் அலுவலக கட்டடம் என பெயர் மாற்ற அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு தெற்கு கலிபோர்னியாவில் உள்ள தபால் அலுவலகத்துக்கு இந்திய வம்சாவளியும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான தலிப் சிங் சவுந்த் பெயர் சூட்டப்பட்டது.
அமெரிக்காவில் தபால் அலுவலகத்துக்கு இந்தியர் பெயர் சூட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
இதையும் படிக்கலாமே: அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஸ்டீஃபன் கர்ரி சாதனை
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…