அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
74 வயதுடைய ட்ரம்ப் மிகவும் வயதானவர் என்பதால் ஹை ரிஸ்க் பட்டியலில் ட்ரம்ப் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஒருநாள் மட்டுமே வீட்டில் தனிமையில் இருந்த ட்ரம்ப், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு லேசாக காய்ச்சல் இருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மற்றபடி அவர் நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்தே பணிகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையின்போது அவருக்கு இரண்டு முறை ஆக்ஸிஜன் அளவு குறைந்து உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. தொடர் சிகிச்சைக்கு பின் அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தனர்.
ட்விட்டரில் தனது கொரோனா அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ட்ரம்ப், கொரோனா பற்றி தான் நன்கு தெரிந்துகொண்டதாகவும், இந்த அனுபவம் பள்ளிக்கு செல்வதை போல இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ட்ரம்ப், தனது ஆதரவாளர்களுக்கு கையசைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்றுவரும் ட்ரம்ப், மருத்துவமனையிலிருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்ரம்ப் விரைவில் குணமாகி அதிபர் தேர்தல் பணிகளை தொடரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: ட்ரம்ப் மரணிக்க வேண்டும் என்று கோரும் ட்வீட்டுக்கள் நீக்கப்படும்: ட்விட்டர்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…