வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்கிருந்தபடி வாக்குகளை செலுத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரத்தின்படி வெளிநாடுகளுக்கு வேலைக்காகவும், படிப்பதற்கும் சென்றவர்களின் எண்ணிக்கை மூன்று கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதில் அந்நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் இந்திய வம்சாவளியினர். வெளிநாட்டில் இருந்தாலும் தொடர்ந்து இந்தியக் குடியுரிமையை வைத்திருப்பவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.
இவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது மற்றொரு புள்ளிவிவரம். இவர்களை இந்தியத் தேர்தல்களில் வாக்களிக்க வைப்பதுதான் தலைமை தேர்தல் ஆணையத்தின் திட்டம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்து வாக்களிக்கும் நடைமுறை ஏற்கனவே இருக்கிறது.
இதற்கு அவர்கள் நேரில் வர வேண்டும். அதனால் பலரும் வாக்களிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள யோசனையின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரில் வராமல் அங்கு இருந்தபடி வாக்களிக்கலாம்.
இ-வோட்டிங் (E-Voting) எனப்படும் மின்னணு முறையில் வாக்களிக்கும் திட்டத்தைதான் தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ளது. அதாவது இ-மெயில் முகவரிக்கு Link அனுப்பப்பட்டு வாக்குகளை செலுத்தும் திட்டம்.
ஒருவேளை இந்த திட்டம் பலனளிக்கவில்லை என்றால், ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகத்தில் வாக்கு பதிவு மையங்களை அமைத்து அதன் மூலம் வாக்களிக்க வைக்கும் யோசனையும் உள்ளது.
மூன்றாவது, தங்களுக்கு பதிலாக வேறு ஒரு நபர் மூலம் வாக்கினை செலுத்தும் யோசனையும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வழி செய்யப்பட்டால் அது தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெறும்.
ஏனென்றால் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய இந்தியர்களின் எண்ணிக்கை அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒன்றிலிருந்து ஐந்து சதவிகிதம் வரை இருக்கிறது.
தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள இ-வோட்டிங் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தற்போது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதையும் படிக்கலாமே: மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் அமெரிக்கா!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…