அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூம் வெற்றிப்பெற்றனர்.
270 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஜோ பைடன் 306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ஆதாரமே இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதனிடையே அமெரிக்க அதிபருக்கான அதிகாரப்பூர்வமான ட்விட்டர் கணக்கான போடஸ் (@POTUS), தற்போது ட்ரம்ப்பிடம் இருந்து வரும் நிலையில், அந்த கணக்கு திரும்ப பெறப்பட்டு, ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20ம் தேதியன்று ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த கணக்கை உலகத் தலைவர்கள் பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை 3.2 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்
இதேபோல் பேஸ்புக் வரும் சனிக்கிழமையன்று அதிபர் கணக்கை ஜோ பைடனிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டில், ஒபாமா நிர்வாகம் மற்றும் டிரம்ப் நிர்வாகம் ஆகிய இருவருடனான அதிகாரப்பகிர்வு போல இந்த ஆண்டும் அதிபரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் பைடனிடம் ஒப்படைக்கப்படும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை அதிபர் ட்ரம்ப் இழந்துவிடுவார்.
இதனிடையே குடியரசுக் கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் அமெரிக்கா தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு ட்ரம்ப்பை வற்புறுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் டிசம்பர் 11 அல்லது 12 முதல் தொடங்கும்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…