அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிக்க ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்ததாக அமெரிக்க அரசின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். 306 தேர்வாளர்கள் வாக்குகளை பைடன் பெற்றிருந்தார்.
அவரது வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்தால் மோதல் மூண்டது.
மிகப்பெரும் பிரச்னைகளையெல்லாம் கடந்து அதிபராக பைடன் பதவியேற்றார். பதவியேற்றவுடன் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பைடன், முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் பைடன் மீது தவறான மற்றும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப ரஷ்ய அதிபர் புதினும், அவரது நிர்வாகமும் முயற்சித்ததாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ட்ரம்பின் தனிபட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு இந்த சம்பவத்தில் அதிக பங்கு இருந்ததாகவும் தெரிவிவ்க்கப்பட்டது.
இதேபோல் உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீது நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில் பைடனையும் சேர்க்க ட்ரம்ப் ஆதரவாளர்கள் முயற்சித்தது அம்பலமாகியுள்ளது. இதற்கு ரஷ்ய அரசும் உதவி செய்துள்ளது.
2016 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதுபோன்று ரஷ்ய தலையீடு இருந்ததாகவும், மோசடி மூலமே ஹிலாரியை தோற்கடித்து ட்ரம்ப் அரியணை எழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடதக்கது.