அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பின இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் தேதி கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன.
அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.
ஜார்ஜ் பிளாயிட் காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கறுப்பினத்தவரின் வாழ்க்கை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் (BLACK LIVES MATTERS) வாசகம் வலுப்பெற்றுவருகிறது.
ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் தான் இப்படி கறுப்பினத்தவர்களுக்கு அநீதி நடப்பதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் பைடன் காலத்திலும் தொடர்கிறது.
இந்நிலையில் மினியாபொலிஸ் நகருக்கு அருகே உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கார் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் கறுப்பினத்தை சேர்ந்த டாண்ட் ரைட் என்ற 20 வயது இளைஞரை கைது செய்ய முயற்சித்தனர்.
அவர், தப்பிக்க முயற்சிக்கவே அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மக்களை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் பதட்டம் ஓய்ந்தபாடில்லை.