அமெரிக்காவில் பெட்ரோலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான கார்கள், ட்ரக்குகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
வட கரோலினாவில் குழாய்கள் மூலம் பெட்ரோல் விநியோகம் செய்யும் கலோனியல் பைப் லைன் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்கள், ஆன்லைன் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் பெட்ரோல் விநியோகம் கடுமையாக தடைபட்டுள்ளது. இதன்விளைவால் ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன
பெட்ரோல் தட்டுப்பாட்டால் கிழக்கு மாகாணங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான கார்கள் பெட்ரோல் நிரப்ப காத்திருக்கின்றன. பெட்ரோல் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் கூடுதலாகவே பெட்ரோலை வாங்கி இருப்பு வைத்துக்கொள்கின்றனர். பெட்ரோல் நிலையங்கள் தாங்கள் பயன்படுத்தும் கம்யூட்டர்களின் சைபர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பெட்ரோல் தட்டுபாட்டால் புளோரிடா அரசு அவசரகால நிலையை அறிவித்தது. இதுகுறித்து பேசிய புளோரிடா கவர்னர், “தென்கிழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எரிவாயு நிலையங்கள் எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவித்துள்ளன. போதுமான அளவு பெட்ரோல் மாநிலத்தை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பீதியில் எரிப்பொருளை வாங்கி பதுக்கி வைக்காதீர்கள்” என தெரிவித்தார்.
ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப் தனது மாநிலத்தில் எரிவாயு வரியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
சைபர் தாக்குதல், டார்க் சைட் (Dark Side)என்ற ரஷ்ய குழுவினரால் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக எரிபொருள் குழாய் இணைப்பு தற்காலிகமாக தடை பட்டுள்ளது.