அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.
மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதேபோல் கடந்த வாரம் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2 தினக்களுக்கு முன் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தொடர்ந்து கரோலினாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள பெட்எக்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கு துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார்.
இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர்.