காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்க தயாராக உள்ளதாக உலக மகா கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
Am donating $100M towards a prize for best carbon capture technology
— Elon Musk (@elonmusk) January 21, 2021
நச்சுவாயுக்கள் காற்றில் கலப்பது அதிகரித்து வருவதால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனால் பருவம் தவறிய பெரு மழை, அதீத வறட்சி என மோசமான விளைவுகள் ஏற்பட்டு மனித குலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாவதை குறைக்கும் முயற்சிகள் ஒரு புறம் நடந்து வரும் நிலையில் மறுபுறம் அந்த வாயுவை காற்றில் இருந்து பிரித்தெடுக்கும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன.
சுற்றுச்சூழல் மாசை குறைக்க விரும்பும் நாடுகள் கார்பன் டை ஆக்சைடை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் என சர்வதேச எரிசக்தி முகமை கடந்தாண்டு கேட்டுக்கொண்டிருந்தது.
இது தவிர கார்பன் டை ஆக்சைடு பிரித்தெடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் தரப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கூறியுள்ளார்.
இப்பணிகளை மேற்கொள்ள ஜெனிஃபர் வில்காக்ஸ் என்ற அதிகாரியையும் பைடன் நியமித்துள்ளனர். இந்நிலையில் எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவு வெளியாகியுள்ளது.
இது குறித்து விரிவான விவரங்களை அடுத்த வாரம் வெளியிடப் போவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா என்ற பெயரில் மின்சார கார்களை தயாரித்து வரும் எலான் மஸ்க் வருங்கால உலகத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
இது தவிர கணினியையும் மனித மூளையையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொள்ளும் நியூராலிங்க் என்ற புத்தாக்க நிறுவனத்தையும் மஸ்க் நடத்தி வருகிறார்.