அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சான் டியாகோ நகரிலுள்ள சபாரி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் இரண்டு கொரில்லாக்களுக்கு கடந்த 6 ஆம் தேதி முதல் கடுமையான இருமல் மற்றும் சளி இருந்துள்ளது.
இதனால் கால்நடை மருத்துவர்கள் அதற்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டனர்.
மனிதர்களுக்கு நடக்கும் பரிசோதனை போன்று அல்லாது பூங்கா அதிகாரிகள் அவற்றின் மலக்கழிவுகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
கடந்த 8 ஆம் தேதி அவற்றின் முடிவுகள் வெளிவந்தன. அதில் அவை இரண்டுக்கும் தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனடியாக இரண்டு கொரில்லாக்களையும் தனிமைப்படுத்தியுள்ள பூங்கா நிர்வாகம், கவனமாக பாதுகாத்து வருகிறது.
இதுகுறித்து பூங்கா செயல் இயக்குனர் லிசா பீட்டர்சன் கூறும்பொழுது, கொரில்லாவுக்கு தொடர்ந்து இருமல் மட்டுமே இருந்து வந்தது. வேறு எந்த அறிகுறிகளும் இல்லை, மற்றப்படி கொரில்லாக்கள் நன்றாகவே உள்ளன. வேறு பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. பூங்கா நிர்வாகத்தினர் அதற்கு நன்கு உணவு மற்றும் எதிர்ப்பு சக்திக்கு தேவையான மருந்துகள் கொடுத்து கவனமாக பராமரித்துவருகின்றனர். அவற்றுக்கு தனியாக உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
விரைவில் இரண்டு கொரில்லாக்களும் நலமுடன் திரும்பும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என தெரிவித்தார்.
கொரோனா பரவ தொடங்கியவுடனே சபாரி பூங்கா மூடப்பட்டது. பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. பூங்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் கவனமாக பின்பற்றப்பட்டன. எனினும், அறிகுறி தென்படாத பூங்கா ஊழியரிடமிருந்து கொரில்லாக்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் 2.30 பேருக்கு கொரோனா பாதிப்பு; 2,600 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…