அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் கொரோனா நோய் தொற்றை தடுக்க, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவில் இந்திய வம்சாவளியினர் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.
“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கொரோனா நோயை விரட்டி அடிப்பதற்கான பணிகளை பதவியேற்பதற்கு முன்னதாகவே முடுக்கிவிட்டுள்ளார். இதற்காக கொரோனா நோய் தடுப்பு குழுவை அவர் அமைத்துள்ளார்.
அந்தப் குழுவில், அமெரிக்காவின் முன்னாள் மருத்துவ ஜெனரல் விவேக் மூர்த்தி, தொற்று நோய் மருத்துவர் செலின் கவுண்டர், அறுவை சிகிச்சை நிபுணர் அதுல் கவாண்டே ஆகிய மூன்று இந்திய வம்சவாளியினரும் இடம் பிடித்துள்ளனர்.
இதில் விவேக் மூர்த்தி, கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்தவர். செலின் கவுண்டரின் தந்தை ஈரோடு அருகிலுள்ள மொடக்குறிச்சியை சேர்ந்தவர்.
அதுல் கவாண்டேவின் தந்தை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் என்றும், அவரது தாயார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்கலாமே: ஆஸ்டின் தமிழ் சங்கம் சார்பில் களைகட்டிய தீபாவளி விழா!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…