அமெரிக்காவில் கருப்பின பெண் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என கூறி போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் கென்னடக்கி மாகாணம் லூயிஸ்வில்லே நகரில் கடந்த மார்ச் 23ஆம் தேதி 26 வயதான கருப்பின பெண், Breonna Taylor காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். போதைமருந்து தடுப்பு சோதனையின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று காவல்துறையினர் மீதும் கொலை வழக்கு பதிய வேண்டும் என கருப்பின மக்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படாது என கென்னடக்கி நீதிமன்றம் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கருப்பினத்தவர் மீதான காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில், நீதித்துறையின் இந்த தீர்ப்பு போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. லூயிஸ்வில்லே நகரம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. இந்தபோராட்டத்தில் இரண்டு காவல்துறையினர் சுடப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இதனை அடுத்து அங்கு அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது, தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Breonna Taylorக்கு நீதி கேட்டு நியூயார்க், வாஷிங்டன், அட்லாண்டா, சிகாகோ ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாமே: அமெரிக்காவை சீண்டி, இறுதியில் அசிங்கப்பட்ட சீனா!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…
FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa
FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter
– https://twitter.com/tamilmicsetusa