“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.
இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,35,529 ஆக அதிகரித்துள்ளது,
மேலும், அங்கு இதுவரை 9 லட்சத்து 34 ஆயிரத்து 4955 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய பேரணிகளால் இதுவரை 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளால் ஏற்படும் கொரோனா பாதிப்புகள் குறித்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
இதில் கடந்த ஜூன் 20 முதல் செப்டம்பர் 22ஆம் தேதி வரை அதிபர் ட்ரம்ப் நடத்திய பேரணிகளால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் ஆராயப்பட்டன.
அதன்படி ட்ரம்ப் நடத்திய 18 பேரணிகளால் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும், 700 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பிடன், ட்ரம்ப்புக்கு தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் பற்றிக்கூட கவலையில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவது குறிப்பிடதக்கது.
இதையும் படிக்கலாமே: பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனா மரணங்களை மருத்துவர்கள் உயர்த்தி காட்டுகின்றனர்- ட்ரம்ப்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…