அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான LEGION OF MERIT விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
அமெரிக்கா – இந்தியா உறவு முறையை பலப்படுத்தவும், இந்தியா உலகளாவிய சக்தியாக உருவெடுக்கவும் தலைமை தாங்கிய பிரதமர் மோடியை பாராட்டும் விதமாக நாட்டின் உயரிய விருதை ட்ரம்ப் வழங்கி கவுரவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடமிருந்து பிரதமர் மோடி சார்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்து விருதை பெற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக பேசிய அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன், அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதிலும், கூட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் சிறப்பாக பணியாற்றியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும், சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த பார்வை மற்றும் தலைமைத்துவத்திற்காகவும், ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் ‘லெஜியன் ஆஃப் மெரிட்’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை தலைவர்களின் சார்பாக அந்தந்த நாட்டின் தூதர்கள் பெற்றுக்கொண்டனர்.
இன்னும் ஒரு சில நாட்களில் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து வெளியேற உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு இந்த விருதை வழங்கியிருப்பது உயர்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜோ பைடன்
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…