அமெரிக்காவில் ஒருவாரத்துக்கும் மேலாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஆட்சி மாற்றத்துக்கான ஏற்பாடுகள் மந்த நிலையில் நடப்பதால், அதை யார் கட்டுப்படுத்துவது என சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
நிலைமை இப்படியே நீடித்தால் மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்ப்பதற்கு இடம் இருக்காது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சராசரியாக நாள் ஒன்றுக்கு 900 பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து வருவதால், மருத்துவர்களும் செய்வதறியாது திகைக்கின்றனர்.
இந்நிலையில் நோயை கட்டுப்படுத்த புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், கொரோனா தடுப்பு குழுவை அமைத்துள்ளார்.
எனினும், ட்ரம்ப் நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு வழங்காததால், பைடன் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டால் மட்டுமே நோய்ப் பரவலை தடுக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அதற்கு ட்ரம்ப் நிர்வாகம் செவி சாய்க்காததால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
தேர்தல் முடிவுகளை ஏற்க ட்ரம்ப் மறுத்துவருவதால் அதிகார மாற்றத்துக்கான பணிகளை தொடங்குவதில் பைடனுக்கு சிக்கல் நீடிக்கிறது.
பொதுவாக அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான உடன், வெற்றியாளர் தரப்பில் ஆட்சி மாற்றத்துக்கான குழு அமைக்கப்படும்.
அந்த குழு சுமூகமான முறையில் அதிகாரங்களை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
ஆனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது, தோல்வியை ஏற்க ட்ரம்ப் தரப்பு மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆட்சிமாற்றத்துக்கான பணிகள் முழுமையாக தொடங்காமல் உள்ளன.
இதையும் படிக்கலாமே: சென்னையில் வாழ்ந்து மறைந்த ஜோ பைடனின் தாத்தா!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…