மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் – இ – தொய்பாவின் மூத்த பயங்கரவாதி சாஜித் மிர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு, 37 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட 8 இடங்களில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதில், 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த கோர தாக்குதல் 12 வருடங்களைக் கடந்தும் உலக மக்களின் மனதில் ஆறாத ரணத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் அமிர் கசாபிற்கு இந்தியா தூக்கு தண்டனை விதித்து அதனை நிறைவேற்றியது. இந்த மும்பை தாக்குதலில் அமெரிக்காவை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் அமெரிக்க விசாரணை அமைப்புகளும், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
மும்பை தாக்குதல் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி சாஜித் மிர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு, 37 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சாஜித் மிர்- ஐ தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: ஹனிமூன் சென்ற தம்பதிக்கு நேர்ந்த கொடுமை!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…