அமெரிக்காவின் அதிபராக வரும் 20ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்க இருக்கும் நிலையில் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்கா வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்று தான் அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் நடாளுமன்ற கட்டடத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த தவறு மீண்டும் நிகழ கூடாது என்பதில் அமெரிக்கா காவல்துறை கவனமாக இருக்கிறது.
குறிப்பாக வரும் 20ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அன்றைய தினம் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடலாம் எனதகவல்கள் வெளியாகி இருப்பதால் வாஷிங்டன் நகரமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாஷிங்டன் நகருக்குள் வருபவர்கள் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஆயுதங்கள் வைத்திருப்போருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர மற்ற மாநிலங்களிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேரிலேண்ட், நியூ மெக்சிகோ உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பதவி ஏற்ற உடன் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை ஜோ பைடன் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பாரீஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இணைவது, குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது போன்றவற்றில் ஜோ பைடன் கையெழுத்திடுவார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: நாடாளுமன்ற வன்முறையில் சிலரை பணயக் கைதியாக பிடிக்க திட்டம்?