அமெரிக்காவில் முதியோர் இல்லத்தில் இருந்த ராணுவ வீரர் ஒருவரை எறும்புகள் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அட்லாண்டாவுக்கு அருகே முன்னாள் இராணுவத்தினருக்கான முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு ஜோயல் என்ற 74 வயது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தங்கியிருந்தார்.
அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது குடும்பத்தினர் முதியோர் இல்லத்தில் வந்து அவரை சேர்த்தனர். அங்கு ஜோயலை நூற்றுக்கணக்கான நெருப்பு எறும்புகள் கடித்துள்ளன.
முதியோர் இல்லத்திலுள்ளவர்கள் அவரை குளிக்கவைத்து வேறொரு அறைக்கு மாற்றியுள்ளனர்.
அந்த அறையிலிருந்த ஏராளமான எறும்புகள் இரண்டு நாட்களாக தொடர்ந்து அவரை கடித்துள்ளன. இதனால் அவர் மிகவும் காயமுற்று உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து முன்னாள் ராணுவ வீரரை முறையாக கவனிக்காத அரசு காப்பகம் மீது ஜோயலின் மூன்று பிள்ளைகள் வழக்கு தொடுத்துள்ளனர்.
மேலும் அமெரிக்க அரசு மீதும், பூச்சிகளை கட்டுப்படுத்தும் நிறுவனம் ஒன்றின்மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும் தங்களுக்கு தலா 10 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனிடையே அந்த முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில் அந்த முதியோர் இல்லம் முதியோர்களை கவனித்துக்கொள்ள ஏற்றதல்ல என அதனை அதிகாரிகள் மூடிவிட்டனர்.
அங்கிருந்த முதியோர்கள் வேறு முதியோர் இல்லத்திற்கு மாற்றப்பட்டதுடன், அங்கிருந்த பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.