தேர்தலில் முடிவுகளை மாற்றி அமைக்கக்கோரி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸூம் வெற்றிப்பெற்றனர்.
270 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றால் வெற்றி என்ற நிலையில், ஜோ பைடன் 306 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை தேர்வாளர்கள் குழுவும் உறுதி செய்தது.
அதிபர் ட்ரம்ப் 214 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். ஆனால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அதிபர் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடத்திருப்பதாக ஆதாரமே இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கக்கோரி ட்ரம்ப் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் தரப்பினர், தேர்தல் முடிவை மாற்றியமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்போராட்டம் ஒருபுறம் நடக்க, ட்ரம்ப் ஆதரவாளர்கள் ட்ரம்ப்பிடமிருந்து தேர்தல் வெற்றி பறிக்கப்பட்டதாக கூறி ஜார்ஜியா, வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்கலாமே: 9 வயதில் ஆண்டுக்கு ரூ.200 கோடி சம்பாதிக்கும் சிறுவன்!
அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…